தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பேருந்து நிலையம் முன்பு திரண்ட தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், வானவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கட்சியினர் இனிப்புகளை வழங்கி வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகர மன்றம் தாஜ்புரா பெரியார் நகர், சத்யா நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தவெக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் விஜய் முதலமைச்சரானதை பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர், திராவிட ஆட்சியை 59 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற விஜய் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளிப்பார் எனவும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.
