உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் ரத்தின ஆபரணங்கள் இழைத்த வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வைர கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும், மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பட்டாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
