திமுக கூட்டணியில் விசிக இல்லை என திமுகதான் அறிவித்ததாகவும், தவெக கூட்டணியில் விசிக இருப்பதாக தான் அறிவிக்கவில்லை எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. அந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது..
யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள்; ஆனால் எங்களுக்கு ஒரு பதவி வேண்டும் என்று கேட்பவர்கள்தான் விசிகவில் இருக்கிறார்கள்.
ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்றுகேள்வி கேட்கும் இளைஞர்கள் வேண்டும்.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்களையே சமாதானப்படுத்த முடியாதபோது ஒரு இயக்கத்தையே தாக்குப்பிடித்து நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை. கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிதான் முடிவு எடுக்கப்படுகிறது.
திமுக – அதிமுக கூட்டணி அமைவதைத் தடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தது நான் தான். ஆனால் சமூக வலைத்தளங்களில் வேறு விதமாக விமர்சிக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த வகையிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பலவீனப்பட ஒரு போதும் இடம் தந்ததில்லை.
திமுக கூட்டணியில் நான் இருந்தபோது இப்போதைய முதலமைச்சர் அம்பேத்கரின் நூலை வெளியிட்டபோது, நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் திமுக கூட்டணியில்தான் இருக்கும் என்றார்.
எனக்கு எத்தனையோ கூட்டணி அழைப்புகள் வந்தபோதும் மதச்சார்பற்ற கூட்டணியில் இருந்து விலகவில்லை.
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக, தலைமைக்குத் தகவல் கொடுத்தேன்.
அமைச்சரவையில் நான் தான் சேரவேண்டும் என ரவிக்குமார் போன்றோ சொன்னபோதும் 30 ஆண்டு காலம் உழைத்த தம்பி வன்னியரசுவை அமைச்சராக்கினேன்.
அப்போது முதலமைச்சரை சந்தித்து பேசியபோது, தேர்தலுக்கு முன்பாக தவெக மீது இருந்த ஐயங்களைக் கூறிவிட்டு, தற்போது ஆட்சி அமைப்பதற்கு மதச்சார்பற்ற சக்திகளை அவர் அழைத்திருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினேன்.
5 ஆண்டு காலம் தவெக ஆட்சி நடக்கும். அதற்கு விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
திமுகதான் கூட்டணியில் விசிக இல்லை எனக் கூறி எங்களுடன் உறவில்லை என்று அறிவித்ததே தவிர, நான் அந்த நட்பை ஒருபோதும் சிதைக்கவில்லை.
தவெக கூட்டணியில் இருப்பதாகவும் நான் இதுவரை அறிவிக்கவில்லை.
அரசியல் வேறு, தனிநபர் நட்பு வேறு. தமிழிசை, பொன்னார், அண்ணாமலை, அன்புமணி என யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது எனது பண்பு. டெல்லி அரசியலைப் போல தமிழகத்திலும் அரசியல் நாகரிகத்தை முன்னெடுத்தவன் நான்“.
