மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் விழாவாக உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா திகழ்கிறது. அதன்படி, முதலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கும். பின்னர், அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கும். அதன்படி, கடந்த 19ம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மீனாட்சி பட்டாபிஷேகம், அதைத்தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று (29.04.2026) தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது.
இந்தநிலையில், அழகர்கோயிலில் கடந்த 27ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, நேற்று (29.04.2026) மாலை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மாநகருக்குள் வந்தடைந்த கள்ளழகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை அளித்து தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில், இன்று (01.05.2026) அதிகாலை தல்லாக்குளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர், பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது மலர்களை தூவி கோவிந்தா… கோவிந்தா… என்ற முழக்கத்துடன் பக்தர்கள் கள்ளழகரை வரவேற்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர். ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் என மாநகரின் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. லட்சக்கணக்கானோரின் வருகையால் மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிரமாக கண்காணித்தனர்.
2ம் தேதி தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தரும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப நிவர்த்தி அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார திருக்கோல நிகழ்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3ம் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது. 4ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 5ம் தேதி அழகர்மலையை அடைகிறார். 6ம் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
