நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண் – செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஹரஹர மகாதேவா” என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.
