நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்தில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கினால், படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் எவை என்பது குறித்து மனுதாரருக்கு (வெற்றிமாறன்) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வெற்றிமாறன் தரப்பில், சென்சார் போர்டின் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தொடர்பான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்சார் போர்டின் ஆட்சேபனையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய படத் தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கு அனுமதி அளித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். இதன்மூலம், மனுஷி திரைப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை வெற்றிமாறன் எடுக்கும் வழக்கின் முடிவைப் பொறுத்தே அமையும்.