நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தன்னை பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகர் வடிவேலுவுக்கு எதிராக இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இடைக்கால மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதான சிவில் வழக்கு விசாரணையில் சிங்கமுத்து தரப்பில் ஆஜராகி பதிலரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அவருக்கு எதிராக ஒரு தலைப் பட்ச தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து , நடிகர் சிங்கமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு 67 வயதாகி விட்டதாகவும், உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதனால் வழக்கில் பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும், எனவே தனக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் சிங்கமுத்து தரப்புக்கு ரூ.2,500 அபராதம் விதித்து அதை வடிவேலு தரப்புக்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பிரதான சிவில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.