ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வரும் நிலையில், அதற்கு முன்பாக இந்தியா உடனான ஒரு முக்கிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராணுவ தளவாடங்கள் முதல் கச்சா எண்ணெய் வர்த்தகம் வரை, இருநாடுகளும் பல கூட்டு ஒப்பந்தங்களை கொண்டுள்ளன.
இந்த சூழலில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இவர் டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். புடின் வருகைக்கு, இந்தியா உடனான RELOS – Reciprocal Exchange of Logistics Agreement (ரெலோஸ்) எனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 18, 2025 அன்று மாஸ்கோவில் இந்திய தூதர் வினய் குமார் மற்றும் முன்னாள் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் ஆகியோரால் முதலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், ரெலோஸ் ஒப்பந்தமானது ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவின் நாடாளுமன்றத்தின் கீழவையில், ரெலோஸ் ஒப்பந்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த வகையில், புடின் இந்தியா வருவதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ரெலோஸ் ஏன் முக்கியமானது?
இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள், கடற்படைகள் மற்றும் விமானப்படைகள் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதை ‘ரெலோஸ்’ ஒப்பந்தம் எளிதாக்கும்.
உதாரணமாக, இந்தியா எரிபொருள் மற்றும் அதன் விநியோகங்களுக்கு ரஷ்ய தளங்களைப் பயன்படுத்தலாம். அதேநேரம், ரஷ்யா தனது ராணுவ பலத்தை மேம்படுத்த இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்திய தளங்களைப் பயன்படுத்தும்.
இதன் மூலம், கூட்டு ராணுவப் பயிற்சிகள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், அமைதி பேச்சுவார்த்தைகள், ஆர்க்டிக் பகுதியில் இந்திய கடற்படைக்கு அனுமதி போன்ற கூட்டு நடவடிக்கைகள் சாத்தியப்படும்.
ரஷ்ய அதிபரின் இந்திய வருவகையின் போது, பல புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இருநாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல், வர்த்தகத்தை அதிகரிக்க உள்ளூர் பணத்தை பயன்படுத்துவது, அணுசக்தி உள்பட எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதி காரணமாக இந்தியாவில் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், உக்ரைன் போர் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சற்றும் விரும்பாத அமெரிக்க அரசு, இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது 50% எனும் கடுமையான வரியை விதித்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. இந்த சூழலில், இந்தியா-ரஷ்யா உடனான புதிய ராணுவ ஒப்பந்தம் அரசியல் பார்வையாளர்களால் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த நேரத்தில், இந்த உச்சி மாநாடு இந்தியா-ரஷ்யா கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்குப் பார்வையை வடிவமைக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
