திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் திமுகவுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்துமத வெறுப்பாலேயே திமுக அரசு அழியும்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அறிவாலயம் அரசின் இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஆதியிலிருந்து முருகப்பெருமான் வீற்று அருள்பாலிக்கும் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாகச் சிலர் மாற்ற முயற்சித்தபோது வேடிக்கை பார்த்துவிட்டு, அறுபடைவீட்டைக் காக்க அலைகடலென மக்கள் திரண்டு ஆர்ப்பரித்தபோது ஏவல்துறையைக் கொண்டு அராஜகம் செய்த திமுக அரசு, தற்போது ஒருபடி மேலே சென்று கார்த்திகேயனின் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டுத் தனது இந்து மத வெறுப்பை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம், மதச்சார்பின்மை வேடம் போட்டு இந்து மதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்கும் திமுக அரசின் இந்த மேல்முறையீட்டு முயற்சியும் அப்பன் முருகனின் ஆசியுடன் முறியடிக்கப்படும்! குன்றம் குமரனுக்கே என்பது ஆணித்தரமாக மீண்டும் உணர்த்தப்படும். மக்களின் மதநம்பிக்கையைப் புண்படுத்தும் திமுக அரசும் தூக்கியெறியப்படும்!
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
