2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய அணி 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தெ.ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனினும் 3வது விக்கெட்டுக்கு கோலி, கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக கோலி விளையாடினார். இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து சதத்தை பதிவு செய்தனர்.
கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கோலி 90 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கோலியின் 53வது சதமாகும். அதேபோல், சர்வதேச அரங்கில் அவரின் 84வது சதமாகும்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 39.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை சேர்த்திருந்தது.
இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 66 ரன்களை குவித்தார்.
50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை இந்திய அணி குவித்தது. இதையடுத்து 359 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தெ.ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.
