எந்த அரசியல் கட்சியும் சாலை நடுவிலும், அருகிலும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மீறினால் அரசு அதிகாரிகள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு விதிமுறைகள் வகுத்துள்ளது.
இந்தநிலையில், சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் அமைக்க வசூலித்த வாடகை, விதிகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து 37 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கொடிக் கம்பங்கள் அமைத்த கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சாலைகளின் நடுவில் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தும், சாலை நடுவில் 10 அடி உயரத்துக்கு கொடிகள் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார். ஆனால் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கொடிக்கம்பம் விழுந்து இரண்டு பேர் மரணமடைந்ததைக் குறிப்பிட்ட நீதிபதி, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.
சமீபத்தில் துணை முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி, நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்கள் அமைந்துள்ள சென்னை பசுமை வழிச்சாலையில், தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இதனால் பாதிக்கப்படுவது சாலைகளில் நடந்து செல்லும் ஏழை மக்கள் தான் என்றும் காரில் செல்லும் மக்கள் அல்ல என்றும் தெரிவித்தார். கொடிகளுக்கு முன்பணம் வசூலிக்க வேண்டும் என்றும் முன்பணம் செலுத்தக் கூடிய நிலையில் தான் கட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைப்பது குறித்து எந்த அதிகாரிகளும் கேள்வி கேட்பதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று கண்டித்தார். சாலை நடுவிலும், அருகிலும் எந்த அரசியல் கட்சியும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்கும்படி, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
