ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அரசு முறை பயணமாக டெல்லிக்கு இன்று வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று கட்டியணைத்து வரவேற்றார்.
உக்ரைன்-ரஷ்யா போர் 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் நிலையில், சர்வதேச எதிர்பார்ப்புக்கு இடையே அவர் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று அவருக்கு பிரதமர் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை டெல்லியில் நடக்க உள்ள, 23வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.
நாளை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்முவையும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் புதின் சந்திக்க உள்ளார்.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் – 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில், இன்று ரஷ்ய அதிபர் இந்தியா வந்துள்ளார். அவரது வருகை முன்னிட்டு 2 நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
புதின் வருகையை முன்னிட்டு டெல்லி விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
