சபரிமலையில் மீண்டும் அதிகரித்துள்ள பக்தர்களின் கூட்டம் காரணமாக பிற்பகல் மற்றும் இரவில், கோயில் நடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கோயில் நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. முதல் சில நாட்கள் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், பாதுகாப்பு பணியில் போலீசாரும், தேவசம் போர்டு நிர்வாகமும் திணறியது. பின்னர், பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தது. இந்தநிலையில், தற்போது பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
கோயில் நடை அடைக்கப்படும் போது பக்தர்கள், 18ம் படி ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் சில மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தந்திரியுடன் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, பிற்பகல் மற்றும் இரவு நேங்களில் கோயில் நடை அடைக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் 1 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை 1.30 மணி வரையும், இரவில், 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11.15 மணி வரையிலும் கோயில் நடை அடைக்கப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 18ம் படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தகுந்த பல முன்னேற்பாடுகளை போலீசார் மற்றும் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகின்றனர்.
