சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘45’. இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கியுள்ள இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஜன.1-ம் தேதி வெளியாகிறது.
சுராஜ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. நடிகர் விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சிவராஜ்குமார் பேசும்போது, “அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டரையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகி இருக்கிறார். விரைவில் நடிகராக ஆகிவிடுவார். உபேந்திராவுக்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர் தான் எனக்கு பிரேக் தந்தார்.
அவர் அட்டகாசமான கலைஞர். ராஜ் பி ஷெட்டி சமீபமாகக் கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேர் கெமிஸ்ட்ரியும் இந்தப் படத்தில் சிறப்பாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம், படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும்” என்றார்.
பின்னர் அவரிடம் “தமிழ்நாட்டில் விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்டோர் திரைத்துறையில் இருந்து அரசியலுக்குச் சென்றதை போல, கர்நாடகாவில் யாருமே அரசியலுக்குச் செல்வதில்லையே ஏன்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “முதலில் அரசியல் பற்றி தெரியாது. மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்தே நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? நடிகராகப் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்யலாம். அரசியலுக்கு வந்தால் அப்படிச் செய்ய முடியாது” என்றார்.
