தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாருக்கு பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக ,எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன். தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
