விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடி சதத்தால், விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகளில் டெல்லி, மும்பை அணிகள் வெற்றி பெற்றன.
டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் குரூப் டி பிரிவு அணிகளான ஆந்திராவும், டெல்லியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. முதலில் பேட் செய்த ஆந்திர அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது. ஆந்திர அணி வீரர் ரிக்கி புய் 122 ரன்கள் விளாசினார்.
இதன்பின்னர் 299 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி விளையாடியது. பிரியான்ஸ் ஆர்யா 74, விராட் கோலி 131, நிதிஸ் ராணா 77 ரன்களை விளாசினர். இதனால், போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
சச்சின் சாதனை முறியடிப்பு: முதல் தரக் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 16,000 ரன்களை கடந்து, சச்சின் ஏற்கெனவே படைத்த சாதனையை கோலி இப்போட்டியில் முறியடித்தார்.
குரூப் சி போட்டி: இன்னொரு போட்டியில், குரூப் சி பிரிவு அணிகளான மும்பை, சிக்கிம் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து மும்பை அணி பேட் செய்தது. ரகுவன்சி, ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரகுவன்சி 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ரோஹித்துடன் முசிர்கான் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 155 ரன்களை குவித்தார். இதனால் 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆட்ட நாயகனாக சதம் விளாசிய ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
