‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்தை, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், ‘1965-ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெண் சிங்கம் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, செம்மொழி படத்தின் கதையை அவரிடம் கூறினேன். அப்போது மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதால், கதையை முழுவதுமாக எழுதும்படி கூறி எனக்கு பாராட்டு தெரிவித்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தேன். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், எனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளார்.
பின்னர், புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம், எனது செம்மொழி கதை. கைவிடப்பட்ட அந்த படம், தற்போது, பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது கதையை திருடி ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி கதையையும், பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இரு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பராசக்தி திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ‘பராசக்தி’ திரைப்படதை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டார்.
