திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல்.கணேசன் வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார். அவருக்கு வயது 92. மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன், 2 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநிலங்களவை எம்.பி. பதவிகளை வகித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார். 1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 சூன் 30ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10ஆம் நாள் வரை பணியாற்றினார்., ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார்.
1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழு செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிசாவில் கைதான இவர், மொழிப்போர் தளபதி என்றும் அழைக்கப்படுகிறார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
