நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து ரூ.38.5 லட்சம் மோசடி செய்ய முயன்ற சைபர் குற்றக் கும்பல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது அந்நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்மன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி, முரளி கிருஷ்ணனின் செல்போன் எண் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், புதிய மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் அவரை தொடர்புகொண்ட மோசடி கும்பல், நிறுவன தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ்அப் முகப்புப் படத்தை (DP) பயன்படுத்தி, அவரைப் போலவே பேசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
அவசர தேவைக்காக ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு உடனடியாக அனுப்புமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்காக “Nisarga Alternative Naturopathy and Paramedical Council” என்ற பெயரில் இயங்கும் நிறுவனத்தின் Yes Bank கணக்கு விவரங்களும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், குறுஞ்செய்தியின் மீது சந்தேகமடைந்த முரளி கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் நேரடியாக உறுதி செய்தபோது இது “Boss Scam” எனப்படும் ஆள்மாறாட்ட சைபர் மோசடி என்பது தெரியவந்தது. இதையடுத்து பணம் அனுப்பாமல் தவிர்த்த அவர், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண், வங்கிக் கணக்கு மற்றும் அதற்கு பின்னால் உள்ள சைபர் கும்பலை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமீப காலமாக நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் கேட்கும் “Boss Scam” மோசடிகள் அதிகரித்து வருவதால், நிறுவனங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
