கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம். இந்த திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தியது. அதாவது கிராமப்புறங்களில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதியாண்டில் உறுதியாக 100 நாள் வேலையும், உத்தரவாதமான ஊதியமும் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்த திட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை தற்போதைய மத்திய அரசு செய்ததுடன், இந்திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ராம் ஜி திட்டம்’ என மாற்றியது. மேலும் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் “G-RAM-G” திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்பு தொடர்பாக பேரவையில் திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் அதனை கூறியதாக முதலமைச்சர் பதிலளித்தார்.
