45சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை கௌரவித்துள்ளார் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் மற்றும் தூய்மை பணியாளர் பத்மா ஆகியோர் பங்கேற்று இருந்தனர். அப்போது மேடையில் பத்மாவிற்கு செருப்பு அணிவித்த பார்த்திபன், அவர் கால் தொட்டு ஆசி வாங்கினார். தொடர்ந்து அவருக்கு புடவை போர்த்தி கௌரவித்தார் பார்த்திபன்.
“பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பார்த்திபன் கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தூய்மை பணியாளரான பத்மா, கடந்த மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் பையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை பாராட்டும் விதமாக முதலமைச்சர் தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரும் பாராட்டி, சன்மானம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
