தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, மகளிர் உரிமை தொகை, இலவச வீடு, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, முதியோர் உதவி தொகை, பல ஆண்டுகளாக சில நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது, மின் கட்டண சலுகை, கல்லூரி மாணவர்களுக்கான சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் எனவும், அலுவல் குழு கூடி, சட்டப்பேரவை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
