தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப்2, 2 ஏ மெயின்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் அதில், 4,20,217 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியான நிலையில், அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்தது. காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
ஆனால் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. சென்னை அரும்பாக்கம் தனியார் பள்ளியில் ஹால்டிக்கெட் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் பதற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசின் குளறுபடியால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தேர்வர்கள் புலம்புகின்றனர்.
