ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஹ்வாஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஷாஹித் பாகேய்’ குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள இலக்குகள் மீது அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தம் மற்றும் அதிர்வுகள் காரணமாக மருத்துவமனைக் கட்டிடம் கடுமையாகக் குலுங்கியது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பெரும் பீதிக்குள்ளாகினர்.
தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த 211 சிறுவர்கள் உள்ளிட்ட புற்றுநோய் நோயாளிகள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் மாற்று மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “உயிரைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான மற்றும் கோழைத்தனமான போர்க்குற்றமாகும் என ஈரான் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது என கூறியுள்ளது.
வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவக் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குழந்தைகள் மருத்துவமனைக்கு அருகே குண்டுகள் விழுந்தது குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
