திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே நடந்த மோதலில் படுகாயமடைந்த தமிழக வெற்றிக்கழகத்தினரை அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திக்க கூட அனுமதி மறுப்பது பேசுபொருளாகியுள்ளது.
சென்னை – பூக்கடை, இப்ராகிம் சாலை, அங்கப்பன் நாயக்கன் தெரு பகுதியில் மக்களிடம் தேர்தலுக்காக சர்வே எடுக்க சென்ற தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 10 பேரை அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளர் கவியரசு என்பவர் தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேரோடு சேர்ந்து போலீசார் முன்னிலையிலேயே தாக்கி விரட்டி அடித்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறும் கட்சியினரை சந்திக்க சென்ற மாநில நிர்வாகிகள் ராஜ்மோகன், லயோலா மணி உள்ளிட்டவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகே பாதிக்கப்பட்டவர்களை நிர்வாகிகள் சந்திக்க சேர்ந்தது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தவெக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, “பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்றிரவு அவர்களை காண ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றோம். உள்ளே விடுவதற்கு அனுமதிக்காமல் காக்க வைத்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
தோல்வி பயத்தால் அராஜக செயலில் ஈடுபடும் திமுகவினர் காட்டுமிராண்டி செயலுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மறுபுறம் இது குறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, “பொதுமக்களுக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் இடையே தான் மோதல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அது குறித்து விசாரித்து செய்தி போடுங்கள்” என கூறியுள்ளார்.
மொத்தத்தில் இந்த விவகாரம் திமுக – தவெக இடையிலான தேர்தல் யுத்தம் பற்றி தமிழகம் முழுக்க பேச வைத்துள்ளது.
