தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் படு பயங்கரமாக வேலை செய்து வருகின்றனர். கூட்டணி அமைப்பது, பிரச்சாரத்தை தொடங்குவது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதுவரை செய்த செயல்பாடுகள், நிலவும் அரசியல் சூழல்கள் எப்படி என்பதை மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை என சர்வேக்கள் மறுபக்கம் ரொம்பவே சீரியஸாக நடக்கின்றன. அப்படி நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் திமுக – அதிமுக இடையிலான வெற்றி வாய்ப்புக்கான சதவிகிதம் தெரிய வந்துள்ளது. அது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தமிழக அரசியலில் தற்பொழுது நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய சூழலில் களம் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாகவே பொதுவான கருத்து நிலவுகிறது. அனால், அதில் உள்ளார்ந்து நோக்குகையில் பெரும் சாதகமாக இருந்த வெற்றி சதவிகித வேறுபாடு, திடீரென விரிவடைந்த அதிமுக – பாஜக கூட்டணியால் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. அதாவது, திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு அதிமுக பாஜக கூட்டணியும் பலம் இல்லாமல் காணப்பட்ட நிலையில், பாஜக எடுத்த தீவிர முயற்சிகளால் அன்புமணி மற்றும் தினகரன் ஆகியோர் கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து அதிமுக கூட்டணி ஓரளவுக்கு வலுவான கூட்டணியாக மாறியிருக்க, தற்போது திமுக தரப்பில் லேசான பதற்றம் தென்படுவதாக உணரப்படுகிறது.
சமீபத்தில் ஆளும் தரப்பில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளின் வாக்கு வங்கி குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் திமுகவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் அளவுக்கு அதிமுக கூட்டணி தயாராகிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, திமுக கூட்டணியில் திமுகவுக்கு 26.35%, காங்கிரஸ் கட்சிக்கு 3.03% , சிபிஐக்கு 0.49%, சிபிஎம்க்கு 0.35%, விசிகவுக்கு 1.43%, மக்கள் நீதி மய்யத்துக்கு 0.42%, வேல்முருகன், கொங்குநாடு ஈஸ்வரன் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 0.53% என மொத்தம் 32.6% ஓட்டு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதுவே மறுபுறம், அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவுக்கு 24.17%, (அன்புமணி) பாமகவுக்கு 2.28%, பாஜகவுக்கு 2.12%,அமமுகவுக்கு 1.15%,வாசன் உட்பட இதரக் கட்சிகளுக்கு 0.45% என மொத்தம் 30.17% ஓட்டு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு கூட்டணிகள் பெறும் மொத்த ஓட்டு சதவிகிதத்தின் வித்தியாசம் வெறும் 2.43% மட்டுமே. அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி சுமார் 2.5% ஓட்டு வித்தியாசத்திலேயே முந்துகிறது. இந்த குறைவான இடைவெளி இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாத ராமதாஸ், பிரேமலதா, ஓ.பி.எஸ், புதிய தமிழகம் போன்றவர்களுக்கு டிமாண்டை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இதனால் தான் பிரேமலதா முடிவை அறிவிக்காமல் இங்கும் அங்கும் பேசிக்கொண்டே இருக்கிறாரா? எனவும் யோசிக்க வைக்கிறது. மேற்கூறிய நிலவரம் தான் உண்மையாகவே நிலவும் பட்சத்தில் இந்த சிறு கட்சிகள் ‘கேம் சேஞ்சர்களாக’ மாறும் வாய்ப்பும் உருவாகும். எனவே தான் இவர்களை தங்கள் பக்கம் இழுக்க இரு மாபெரும் கூட்டணிகளும் மிகவும் பிரயத்தனப்படுகின்றன.
திமுக – அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக்கட்சிகளும் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்த இருகட்சிகளின் வெற்றியை முடிவு செய்வது என்னவோ வெறும் ஒன்றரை சதவிகிதம் முதல் இரண்டரை சதவிகித வாக்குகள் தான். இதனால் தான் சின்ன சின்ன கட்சிகளைக்கூட வளைத்துப்போட்டு ஆட்சிக்கு வருவதில் 2 பிரதான திராவிடக் கடசிகளும் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு புதுமையாக இருக்கப்போகும் 2026 தேர்தல் களத்தில் ‘பழைய டெக்னிக்குகள்’ வேலை செய்யுமா? கூட்டணி கட்சிகள் முன்பு போல வளைந்து கொடுப்பார்களா? அதுபோக தேர்தல் வாக்குறுதிகள் எப்படி இருக்கப்போகின்றன? அதனை மக்கள் எப்படி பார்க்கப்போகின்றனர்? என்பதெல்லாம் போகப்போக தெரியும்.
