பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நேற்று (பிப்ரவரி 22, 2026) நள்ளிரவில் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் ஆகிய மூன்று மாகாணங்களில் உள்ள ஏழு முக்கிய பயங்கரவாத மையங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ஐஎஸ்-கே (IS-KP) அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாகப் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பன்னு மற்றும் பஜார் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த “உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்திப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகப் பாகிஸ்தான் அரசு நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்கள் மற்றும் பதுங்கு குழிகள் இந்தத் தாக்குதலில் முழுமையாகத் தகர்க்கப்பட்டதாகப் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படை பொதுமக்களின் வீடுகள் மற்றும் மதப் பள்ளிகள் மீது குண்டு வீசியதாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார். இந்தத் தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
