ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம், நிலவில் மோதியதால், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் பயர்ப்ளை ஏரோஸ்பேஸ் லேண்டரை நிலவுக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாம் அடுக்கு பாகம், விண்வெளியிலேயே தங்கி விட்டது. எரிபொருள் தீர்ந்த நிலையில், விண்வெளியில் ஒரு வருடத்திற்கும் மேலாக மிதந்து கொண்டிருந்த 4 டன் எடையுள்ள ராக்கெட் கழிவு பாகம், மணிக்கு சுமார் 8,700 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளது.
இதனால், நிலவில் சுமார் 18 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் உருவாகியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விண்வெளிக் கழிவுகள் நிலவில் மோதுவது இது முதன்முறையல்ல. 2022ம் ஆண்டில் சீன ராக்கெட் பாகம் ஒன்று நிலவில் மோதியது. மேலும், நாசாவும் நிலவின் தூசி மற்றும் அதிர்வுகளை ஆய்வு செய்வதற்காகத் தனது ராக்கெட் பாகங்களை நிலவில் திட்டமிட்டு மோதவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட, நிலவில் பொருட்கள் வந்து மோதும் போது, அதன் மேற்பரப்பு எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை அறிந்து கொள்ள, மோதல் நிகழ்ந்த இடத்தின் பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
