ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு மேல் சிகிச்சைக்காக ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், நேற்று (பிப்ரவரி 23) இரவு சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
ரெட் பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பீச்கிராஃப்ட் C90 (Beechcraft C90) ரக விமானம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில், அதாவது இரவு 7:34 மணியளவில் கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் சிமாரியா பகுதியில் உள்ள கசாரியா காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி சஞ்சய் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா, உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா, நோயாளியின் உறவினர்களான அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார், மற்றும் விமானிகள் விவேக் விகாஸ் பகத், சவ்ராஜ்தீப் சிங் ஆகிய 7 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த சஞ்சய் குமாரை ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. மோசமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக விமானம் பாதையை மாற்ற அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் கடும் சவால் நிலவியது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஏர் கிராஃப்ட் விபத்து விசாரணை பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
