அமெரிக்க கிழக்கு கடற்கரையில் திங்கட்கிழமை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது, மேரிலாந்து முதல் மைனே வரையிலான பல மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் பனிப்புயல் எச்சரிக்கைகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே மிகவும் வலிமையான புயல் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பனிப்புயல் காரணமாக சுமார் 5,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி மலைபோலக் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் மற்றும் பாஸ்டன் நகரங்களில் உள்ள பொதுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல வணிக நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளன.
நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் 19 இன்ச் அளவிற்கும், ரோட் தீவின் வார்விக் பகுதியில் 3 அடி அளவிற்கும் பனி கொட்டியுள்ளது. மணிக்கு 133 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
பனி மற்றும் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் சேதமடைந்து சுமார் 4,50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.
வீடற்றவர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த வார இறுதியில் மீண்டும் ஒரு பனிப்புயல் வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
