நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டது, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழலில், த்ரிஷாவுடன் அவர் பொதுவெளியில் தோன்றியது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து மேடையேறிய வீடியோக்கள் வைரலான நிலையில், இந்தப் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளானது.
இதற்கிடையே,, விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரமான ‘குந்தவை’யைக் குறிப்பிட்டுப் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்தது. “குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் (உட்கார வைத்தால்) நல்லது; அவர் வெளியே வராமல் இருப்பதே பல சிக்கல்களைத் தவிர்க்கும்” என அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக த்ரிஷா, “மைக் இருப்பதாலேயே ஒருவரது பேச்சு அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது; அது ஒருவரின் முட்டாள்தனத்தை உரக்கச் சொல்லும்” எனச் சாடியிருந்தார். த்ரிஷாவின் இந்தக் காட்டமான பதிலைத் தொடர்ந்து, பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒருபுறம் 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்த ஹேஷ்டேக்குகள் (#T20WorldCup2026final) தெறிக்கவிட்டாலும், அதற்கு இணையான வேகத்தில் #Trisha என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. த்ரிஷாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து மற்றொரு தரப்பினரும் என இணையம் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் உற்றுநோக்கப்படுவதால், இந்தத் திருமண நிகழ்வு விவகாரம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
