அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான நடைபெற்று வரும் பொதுத் தேர்தலுக்கும், 6 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 1,111 பார்வையாளர்களை நியமித்துள்ளது.
தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் போதே, வன்முறையற்ற மற்றும் பணப் புழக்கமற்ற தேர்தலை உறுதி செய்வோம் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் உறுதியளித்திருந்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் “கண்களாகவும், காதுகளாகவும்” செயல்பட இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் நியமிக்கப்பட்டுள்ள 1,111 அதிகாரிகளில், அதிகப்படியான அதிகாரிகள் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 136 பொது பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவின பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட அனைத்துப் பார்வையாளர்களும் நாளை (மார்ச் 18) மாலைக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் சென்று பணியைத் தொடங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொகுதிகளுக்கு வந்திறங்கியவுடன், அதிகாரிகள் தங்கள் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் அல்லது பொதுமக்கள் தங்களின் தேர்தல் புகார்களைத் தெரிவிக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தைப் பார்வையாளர்கள் ஒதுக்குவார்கள். அரசியலமைப்புச் சட்டம் 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் இந்தப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேரடியாகத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுதந்திரமாகச் செயல்படுவார்கள்.
