தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதவிக்கு ஆபத்து இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வும், தற்போதைய சட்ட ஆலோசகருமான இன்பதுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் தேர்தல் பரப்புரை பணிகளுக்குத் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) அதிகாரிகள் முறைகேடாக உதவி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 1975-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளைப் பயன்படுத்திய காரணத்திற்காக இந்திரா காந்தியின் பதவி பறிபோன வரலாற்றுச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்றதொரு நிலை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் (ECI) முறையான புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்த இன்பதுரை, இதற்கான முக்கிய ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். குறிப்பாக, திமுகவின் பிரச்சாரங்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததற்கான வீடியோ காட்சிகள் மற்றும் மின்னஞ்சல் (E-mail) உரையாடல்களை ஆதாரமாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் திட்டமிட்டு மீறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த இன்பதுரை எம்பி., “பெண்களின் மாண்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசுவதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த தேர்தலில் இதே திமுக மேடையில் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசினார். அப்போது திமுகவினர் எங்கு சென்றனர்? விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்களே, அதில் திமுகவினரின் நிலைப்பாடு என்ன?
பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி இழிவாக பேசினார். அப்போது கேட்காதவர்கள், இப்போது கேட்கிறார்கள்; பெண்களின் மாண்பு, கௌரவத்தைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளே போக வேண்டியதாக இருக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். எத்தனை நாள் இந்த பூச்சாண்டி காண்பிப்பீர்கள்; உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது திமுக வழக்கறிஞர்கள் தான் அவர்களை ஜாமீனில் வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னாள் திமுக இருந்திருக்கும் என்கிற சந்தேகம் வருகிறது.
தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளோம். அதில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அவருக்கு பின்னால் அரசு ஊடக வாகனம் செல்கிறது. அரசு ஊடக வாகனத்தில் அரசு அதிகாரிகளும் செல்கின்றனர். முதலமைச்சரின் பிரச்சாரத்தை வீடியோவாக பதிவு செய்து பத்திரிகை, ஊடகங்களுக்கும், திமுக ஐடி விங்குக்கும் கொடுக்கிறார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
அதற்கான ஆதரங்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளோம்; இவை நிரூபிக்கப்பட்டால் முதலமைச்சர் போட்டியிடுவது செல்லாது; இதனை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளோம்; டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அளித்துள்ளோம்.
அரசு அதிகாரிகள், அரசு வேலையைதான் செய்ய வேண்டும்; அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு பணி செய்வதை ஏற்க முடியாது; இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
