தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) உற்சாகத்துடன் நிறைவடைந்தது. பொதுவாக வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்று மாலையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) வெளியாவது வழக்கம். ஆனால், இந்த முறை ஏப்ரல் 29-ம் தேதி மாலை வரை எந்தவொரு ஊடகமும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையான தடை விதித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மேற்கு வங்கத்தில் இன்னும் தேர்தல் பணிகள் நிறைவடையவில்லை என்பதுதான். அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் போது, ஒரு மாநிலத்தில் வெளியாகும் கருத்துக்கணிப்பு மற்ற மாநில வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்தத் தடையை ஆணையம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல்தான் தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வமான கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கும். தற்போது கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் களத்தில் இறங்கித் தரவுகளைச் சேகரித்து வந்தாலும், அவற்றை அடுத்த 5 நாட்களுக்கு ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக வெளியாகும் இந்த எக்சிட் போல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
