மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டுள்ள வந்தே மாதரம் சட்டத் திருத்த மசோதாவிற்குத் தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதாகக் கூறி சட்டத் திருத்தம் கொண்டுவருவது என்பது தேசிய உணர்வைத் திணிக்கும் முயற்சியே ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக முதல் பாடலாகப் பாடப்பட்டு வரும் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை’ நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் மறைமுக வேலையை மத்திய பா.ஜ.க அரசு செய்கிறது. மாநில மொழிகளின் உரிமைகளிலும், கலாச்சார அடையாளங்களிலும் கை வைக்கும் இத்தகைய மசோதாக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆளுநரின் உத்தரவின்படி மூன்றாவது பாடலாகப் பாடப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மத்திய அரசின் இந்த நகர்வுகள் மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார்.
