தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என தாம் கருதுவதாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் அளித்த பேட்டியில், ”முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள தம்பி விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வரலாற்று பதிவை புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார். இளைய சமுதாயம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
அதனால் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என நினைக்கிறேன். பத்து தொகுதிகள்தான் பத்தாமல் இருக்கிறது. அந்த பத்தும் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். அதனால் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.
பாசிச சக்திகள் என்று பாசமிகுந்த எங்களை தொடர்ச்சியாக முதலமைச்சர் கூறி வருகிறார். தோல்வியை தழுவி இருப்பவர்களை எந்தவிதத்திலும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. தோல்வியை தழுவியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கும் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
