தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது ஆதரவை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியும் என்பதில் உறுதியாக இருப்பதால், தற்போது 108 இடங்களை வைத்துள்ள தவெக, மீதமுள்ள இடங்களுக்காக இடதுசாரி கட்சிகளான சிபிஐ , சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரிக் கடிதம் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, ஆதரவு கோரி காங்கிரஸிடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு தவெக தலைவெ விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஆகியோர், தவெக-வின் நிலைப்பாட்டைப் பொறுத்து தங்களின் அடுத்தகட்ட முடிவை கட்சி மேலிடம் ஆலோசித்து எடுக்கும் எனக் கூறியுள்ளனர். விசிக தலைவர் திருமாவளவனும் இது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்த பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நகர்வுகள் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி மலர்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
