தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி, அக்கட்சியின் தலைவர் விஜய் தனக்குக் கடிதம் அனுப்பியுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தரப்பிலிருந்து ஆதரவு கோரப்பட்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும், விசிக முன்வைத்து வரும் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கை முழக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். தவெக-விற்கு ஆதரவளிப்பதில் உள்ள சாதக பாதகங்கள் மற்றும் இது எதிர்கால அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறிய திருமாவளவன், இது தனிநபர் முடிவல்ல, கட்சியின் கூட்டு முடிவு என்பதை வலியுறுத்தினார். இது குறித்து விவாதிக்க நாளை காலை விசிகவின் முன்னணிப் பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன் பின்னரே தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா அல்லது தற்போதைய நிலையில் விலகி இருப்பதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் விசிகவின் நாளை காலை கூட்டத்தின் மீது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
