தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த முட்டுக்கட்டையை உடைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். தவெக-விடம் போதிய பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆலோசித்து இந்த ஆதரவை வழங்குகிறோம்,” எனத் தெரிவித்தனர்.
வெளியில் இருந்து ஆதரவு – அமைச்சரவையில் பங்கில்லை: தவெக அமைக்கும் அமைச்சரவையில் இடதுசாரி கட்சிகள் நேரடியாகப் பங்கேற்காது என்றும், கொள்கை அடிப்படையில் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மே 10-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் புதிய அரசு அமையாவிட்டால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைவர்கள், அந்தச் சூழலைத் தவிர்க்கவே இந்த ஜனநாயகக் கடமையை ஆற்றுவதாகக் குறிப்பிட்டனர்.
திமுக உடனான உறவு மற்றும் விசிக-வின் நிலைப்பாடு: இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஆதரித்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இன்று மாலை 6:30 மணிக்கு திருமாவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறினர். “திமுக-வுடனான எங்களது கொள்கை ரீதியிலான உறவு தொடரும். ஆனால், தற்போது திமுக-விடம் பெரும்பான்மை இல்லை என்பதால் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக-வே ஆட்சி அமைக்க முடியும்,” என அவர்கள் விளக்கமளித்தனர்.
சுயமான முடிவு: விஜய் ஆட்சி அமைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் எங்கும் கூறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய இடதுசாரி தலைவர்கள், விஜய்யை ஆதரிக்க திமுக-வின் அனுமதி தேவையில்லை என்றும், இடதுசாரிகள் சுதந்திரமான கட்சிகள் என்பதால் இந்த முடிவைச் சுயமாகவே எடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர். எதிர்காலத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச இது சரியான தருணம் அல்ல என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
