தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், நிர்வாக ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.. அதன் ஒரு பகுதியாக, தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களை நியமிப்பதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை வழிநடத்தவும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வானவர்களுக்கு நாளை காலை 9:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். புதிய முதலமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி அவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
