திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு, முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னரும், அதிமுகவில் நிலவும் சலசலப்பு அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரானதா என்னும் வினாவை எழுப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கான 108 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற விஜய் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விஜய்க்கு ஆதரவளிக்கலாம் எனவும் கூடாது எனவும், முரண்பட்ட வாக்குவாதங்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்துவது போல் சி.வி.சண்முகம், எஸ்.பிவேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு முரண் நிற்பதாக தகவல்கள் பரவியது. இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு மே 9ஆம் தேதி சென்னைக்கு அழைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பின்னர் சி.வி.சண்முகத்தின் வீட்டிலும் 36 எம்.எல்.ஏக்கள் கூடிப் பேசினர்.
இதே நாளில்தான், தனக்கு தேவையான 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக விசிக தரப்புடன் தவெக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. இதன்பின்னர் விசிக மட்டுமின்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தனது ஆதரவை நல்கிறது.
இதனால் மே 10 ஆம்தேதி தவெக ஆட்சியமைத்து சி.ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்பின்னரும் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் அலுவலகத்தில் அத்முக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளரை மாற்றுவது, சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதே நேரம், எடப்பாடி பழனிசாமி தலைமைய்லும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 3 வது நாளாக அதிமுகவில் இந்த குழப்பம் நீடித்து வருகிறது.
