திருச்சியில் உள்ள உலக பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ரங்கநாதர் கோயிலில், சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி, ஒவ்வொரு நாளும், காலை, மாலை என இருவேளையில், பல்வேறு வாகங்களில் எழுந்தருளும் நம்பெருமாள், எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார்.
அந்த வகையில் 4-ம் நாளான நேற்று காலை இரட்டை பிரபை வாகன சேவை நடைபெற்றது. மாலையில் கருட வாகன சேவை நடைபெற்றது. வீதியில் உலாவந்த பெருமாளை பக்தர்கள் வழிநெடுங்கிலும் நின்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 5-ம் நாளான இன்று காலையில் சேஷ வாகன சேவை நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாள் இன்று அதிகாலை கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு மண்டபத்தை வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்திருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன் பின் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு அனுமந்த வாகனத்தில் புறப்படும் ஸ்ரீநம்பெருமாள், சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இரவில் வாகன மண்டபத்திற்கு சென்று, பின் கண்ணாடி அறையை சென்றடைகிறார். வாகன சேவையை முன்னிட்டு விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
