தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி, அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் – நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
