தமிழகத்தில் தவெக தலைமையிலான அமைந்துள்ள புதிய அரசில் அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு, புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்பட 9 பேர் அமைச்சர்களாக முதற்கட்டமாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதன்பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த விஜய்க்கு, அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 25 பேரும், அமமுக எதிர்ப்பு எம்.எல்.ஏ காமராஜும் ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
தவெக ஆரம்பித்து விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே, “தன்னுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும்” என்று ஜோசப் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார். தற்போது தேர்தலுக்கு முன்பாகவும் அதனையே விஜய் பேசியிருந்தார். அதன்படியே தற்போது அமைச்சரவை பங்கீடும் அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?
இதன்படி, ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 26 அமைச்சர்களும் 8 அமைச்சர் பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாக தவெக வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி: தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
எஸ்.பி.வேலுமணி அணி (அ.தி.மு.க பிரிவு): அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக): தி.மு.க கூட்டணியில் வென்று, தற்போது த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விசிக தரப்பில் 1 இடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்தும் தற்போது தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, புதிய அமைச்சரவை பட்டியலைத் தயாரிக்க முதல்–அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டு, துறைகள் ஒதுக்கப்பட்ட பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) ஆளுநர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிகிறது.
புதிய அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முதல்–அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்கள், முதல் சட்டசபை கூட்டத்தொடர் எவ்வாறு நடைபெறும், அதன் முழு ஒளிபரப்பும் நேரலையில் காட்டப்படுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இப்போதே தவெகவினர் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் எழுந்துள்ளது.
