பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் செயல்படுத்தியிருக்கிறார்.
ஈரான்- அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும், தேவைக்கேற்ப எரிபொருள்கள் கிடைக்காமல் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களோடு முண்டியடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல், சி.என்.ஜியின் விலையை எண்ணெய் நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில் அண்மையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கல் தவிர்க்க வேண்டும், பெட்ரோல் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை ஆளுநரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின் போதும் 10 காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
தற்போது, ஆளுநருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை நான்காக குறைக்கப்பட்டுள்ளது.
