தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் கலைஞர் முத்துக்காளை, தற்போது தன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மருத்துவச் சூழல் காரணமாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் உதவி கோரியுள்ளார். ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து அவர் செய்த ‘செத்து செத்து விளையாடுவோமா’ காமெடியும், ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ திரைப்படத்தில் ஒற்றனாக வந்து அவர் செய்த அலப்பறைகளும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவை.
நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு அண்மையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதற்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்குத் தலையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக, கடந்த 17 நாட்களாக அவர் சுயநினைவின்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு மூச்சுவிடச் சிரமப்பட்டு வரும் தனது மனைவிக்கு, உயர்தர மேல் சிகிச்சை அளிக்க நிதியுதவி தேவைப்படுவதாக முதலமைச்சர் விஜய்க்கு முத்துக்காளை உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
முன்னதாக, முத்துக்காளை அவர்கள் நடிகர் விஜயுடன் ‘மின்சாரக் கண்ணா’, ‘தமிழன்’, ‘யூத்’, ‘பகவதி’, ‘சுறா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னோடு நடித்த சக கலைஞரின் துயரத்தைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் செயலில் இறங்கினார். முதற்கட்டமாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தொலைபேசி மூலம் முத்துக்காளையிடம் பேச வைத்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக அமைச்சர் ராஜ்மோகனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கே நேரில் அனுப்பி வைத்தார். அங்கு சென்ற அமைச்சர், முத்துக்காளையின் மனைவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து நலம் விசாரித்தார். மேலும், மாலதிக்குத் தேவையான அனைத்து விதமான உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் தங்கு தடையின்றி வழங்க மருத்துவக் குழுவினருக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட கலைஞரின் குரலுக்கு அடுத்த கணமே செவிசாய்த்து, முதலமைச்சர் விஜய் அரசு நிர்வாகத்தின் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ள இந்தச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
