புதுடெல்லியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லி மாநில அரசு ஒரு முக்கிய நிர்வாகச் சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 நாள்கள் வீட்டில் இருந்தே பணிபுரியும் புதிய வசதியை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்துள்ளார்.
அரசுத் துறைகளைப் போலவே, டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையைக் கடைப்பிடிக்குமாறு அம்மாநிலத் தொழிலாளர் துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் சர்வதேசப் பதற்றங்களுக்கு இடையே, எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று, டெல்லி அரசு “மேரா பாரத், மேரா யோக்தான்” (Mera Bharat, Mera Yogdaan) என்ற 90 நாட்கள் நீடிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் அறிவுறுத்தலின்படி, எரிபொருளையும், அரசுப் பணத்தையும் மிச்சப்படுத்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது அரசு வாகனங்களைத் தவிர்த்து, டெல்லி மெட்ரோ ரயிலில் மட்டுமே பயணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 4 வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும், அதில் 2 வாகனங்கள் மின்சார வாகனங்கள் (EV) ஆகும். சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, டெல்லி அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி (MCD) அலுவலகங்களின் வேலை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஓராண்டிற்கு டெல்லி அரசின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசுச் செலவில் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 6 மாதங்களுக்குப் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்கள் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் இந்த 2 நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை எந்த அளவிற்குப் பின்பற்றப்படுகிறது என்பதை அம்மாநிலத் தொழிலாளர் துறை தொடர்ந்து கண்காணிக்கும் என்று முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
