கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற முதல் நாளான இன்றே, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மூன்று மிக முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய அமைச்சரவைக் கூட்டத்திலும் இத்திட்டங்களுக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு இலவச பஸ் பயணம்: கேரள மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டத்தின் மூலம் மாநிலத்தில் சுமார் 1.88 கோடி மகளிர் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பொதுமக்களின் சுகாதாரப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஆஷா (ASHA) பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதச் சம்பளத்தில் ₹3,000 உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
முதியோர் நலனுக்காக தனித்துறை: முதியவர்களின் மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக பிரத்யேகமாக “தனித்துறை” ஒன்றை உருவாக்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம், ஆஷா பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் முதியோர் நலத்துறை போன்ற மக்கள் நலத் திட்டங்களை வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசு அறிவித்திருப்பது கேரள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
