2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, அடுத்ததாக டெல்லி அரசியலில் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தநிலையில், தனது அடுத்தகட்ட நகர்வாக டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் தங்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதன்காரணமாக தமிழகத்தில் இருந்து விரைவில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் தவெக-வுக்கு எம்.பி. இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தவெக சார்பில் நாடாளுமன்றத்தின் மேலவைக்குச் செல்லப்போகும் முதல் மாநிலங்களவை எம்.பி. யார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே பலமாக எழுந்துள்ளது.
இதற்காக தவெக மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உள்ள சிலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், அக்கட்சியின் தலைவர் விஜய் சில முக்கியமான மற்றும் தீவிரமான அறிவுரைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், மாநில நலனுக்காகவும் டெல்லியில் நமது குரல் கம்பீரமாக ஒலிக்க வேண்டும் என்றும் அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் விஜய் கூறியதாக தெரிகிறது.
ராஜ்யசபா எம்.பி. பதவியைக் குறி வைத்து கட்சியில் தேவையற்ற பிரிவினையோ அல்லது கோஷ்டி பூசலோ எழக்கூடாது என்றும் பதவி என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பே தவிர, சுய லாபத்திற்கானதாக இருக்கக் கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு விஜய் அறிவிரை வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே, தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் தவெக தனது முதல் பிரதிநிதியை அனுப்பப் போவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
