சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இனி காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் முறையில் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி நிரந்தரப் பணியாளர்கள் 12,960 பேர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 23,421 பேர் என மொத்தம் 36,381 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் பணி நேரத்திற்கு முறையாக அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், இதனால் மக்கள் பணிகள் தொய்வடைவதாகவும் புகார் எழுந்து வந்தது.
இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இனி காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் (Biometric) முறையில் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக அமலுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகப் பணிகளுக்காகவும், கள ஆய்விற்காகவும் வெளியே செல்லும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கண்காணிக்கவும் புதிய வழிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வெளியே செல்லும் ஊழியர்கள் தங்களது கைபேசியில் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியை பயன்படுத்தி, தாங்கள் இருக்கும் இடத்தை (Live Location) பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
